இலங்கை
கந்தானையில் ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு

சிலாபத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயிலுடன் முச்சக்கரவண்டி ஒன்று மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (09) காலை கப்புவத்தை மற்றும் கந்தானை ரயில் நிலையங்களுக்கு இடையிலுள்ள ரயில்வே கடவையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஆரம்பகட்ட தகவல்களின்படி, ரயில் கடவையை கடக்க முயன்ற முச்சக்கரவண்டி, வேகமாக வந்த ரயிலுடன் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தின் தாக்கம் காரணமாக முச்சக்கரவண்டி கடுமையாக சேதமடைந்ததுடன், அதில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் அடையாளம் மற்றும் விபத்திற்கான காரணம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பவம் தொடர்பாக ரயில்வே திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



