மட்டக்களப்பில் சோகம்: இரு பிள்ளைகளின் தாயார் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மட்டக்களப்பு கிரான்குளத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயாரான 41 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் நேற்று (11) உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் கடந்த மாதம் இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கி காயமடைந்திருந்ததுடன், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் விவசாயப் பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி வந்துள்ளார்.
அவர் தனது கடமைகளை சிறப்பாக மேற்கொண்டதுடன், சக உத்தியோகத்தர்களுடனும் நல்ல புரிந்துணர்வுடன் பணியாற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது திடீர் இழப்பு குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக உத்தியோகத்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.




