வவுனியாவில் ஒரே ஒரு மாம்பழம் ரூ.3 இலட்சத்திற்கு ஏலம்; தொடர்ச்சியாக 3ஆவது ஆண்டும் பெண் ஒருவர் கொள்வனவு

வவுனியா உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் ஆறாம் திருவிழாவான மாம்பழத் திருவிழாவில், விநாயகருக்கு படைக்கப்பட்ட ஒரே ஒரு மாம்பழம் 3 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று (23) இடம்பெற்றுள்ளது.
திருவிழா நிறைவடைந்த பின்னர், ஆலய வளர்ச்சி நிதிக்காக குறித்த மாம்பழம் ஆலய நிர்வாகத்தினரால் ஏலத்தில் விடப்பட்டது.
10,000 ரூபாயில் ஆரம்பமான ஏலம் சில நொடிகளில் ஒரு இலட்சம் ரூபாயைத் தாண்டியதுடன், தொடர்ந்து இடம்பெற்ற போட்டியில் இறுதியாக 3 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் முடிவடைந்தது.
வவுனியா உக்குளாங்குளம் பகுதியைச் சேர்ந்த திருமதி சிந்துஜா உபாரிஸ் ஜெதீஸ்வரன் என்பவர் 3 இலட்சம் ரூபாய்க்கு மாம்பழத்தை ஏலத்தில் கொள்வனவு செய்துள்ளார்.
குறிப்பாக, இந்த ஆலயத் திருவிழாவில் ஏலம் விடப்படும் மாம்பழத்தை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகவும் அவரே கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




