யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை வழக்கு;வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட சித்தமருத்துவ துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் தொடர்பான கொலை வழக்கு விசாரணையில், சாட்சியங்கள் மற்றும் நீதிமன்றச் சான்றுகளின் அடிப்படையில் பல முக்கிய தகவல்கள் நீதிமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
குறித்த கொலைச் சம்பவம் விரிவுரையாளரின் இல்லத்திலேயே இடம்பெற்றுள்ளதாகவும், கழுத்து நெரிக்கப்பட்டதன் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நேற்று (03) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிவான் எஸ். லெனின்குமார் மேற்கண்ட விடயங்களை சுட்டிக்காட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்த நீதிவான், வழக்கை எதிர்வரும் ஜூன் 16 ஆம் திகதிவரை ஒத்திவைத்தார். மேலும், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட விரிவுரையாளரின் மருமகன் மற்றும் மகளின் விளக்கமறியல் காலத்தையும் அன்றைய தினம் வரை நீடிக்க உத்தரவிட்டுள்ளார்.
வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனின் வழிகாட்டுதலின் கீழ் சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷான் முன்னிலையாகினார்.
முதன்மை சந்தேக நபரான மருமகன் சார்பில் சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் ஆஜராகியிருந்தார். இரண்டாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள மகள் சார்பில் சட்டத்தரணி சமந்த அத்துக்கோரளவின் வழிகாட்டுதலின் கீழ் மற்றொரு சட்டத்தரணி நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.




