மன்னாரில் பழமையான கத்தோலிக்க ஆலயத்தில் புதையல் தோண்டும் முயற்சி? மக்கள் அதிர்ச்சி

மன்னார் சவுத்பார் பகுதியில் அமைந்துள்ள பழமையான கத்தோலிக்க ஆலயம் ஒன்றில் சட்டவிரோத புதையல் தோண்டும் நடவடிக்கை இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நீண்டகாலமாக பராமரிப்பின்றி கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயத்தில், நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
முற்றிலும் சேதமடைந்த நிலையில் காணப்படும் குறித்த ஆலயப் பகுதியில் அகழ்வு இடம்பெற்றதற்கான தடயங்கள் காணப்பட்டதாகவும், சம்பவ இடத்தில் திஷ்டி நூல்கள், கற்கள் மற்றும் பூஜை நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் சில பொருட்களும் மீட்கப்பட்டதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
இந்த ஆலயம் அமைந்துள்ள பகுதி வரலாற்று மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, புனித ஜோசப் வாஸ் முனிவர் இலங்கைக்கு முதன்முதலில் வருகை தந்த பகுதிக்கு அண்மையில் இந்த ஆலயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்த போதிலும், இதுவரை சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தரவில்லை என்றும், எவ்வித சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் மத பாரம்பரிய தளங்களை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.




