அமரர் சிவ சிதம்பரத்தின் 24ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நெல்லியடியில்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி சபாநாயகருமான அமரர் சிவ சிதம்பரத்தின் 24ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (05.06.2026) நெல்லியடியில் உணர்வுபூர்வமாக அனுசரிக்கப்பட்டது.
நெல்லியடியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலை முன்பாக காலை 8.00 மணியளவில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இதன்போது, அமரர் சிவ சிதம்பரத்தின் அரசியல் மற்றும் சமூகப் பணிகளை நினைவுகூரும் வகையில் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையிலான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.
அத்துடன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுகிர்தன், கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் மற்றும் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
தமிழர் அரசியல் வரலாற்றில் முக்கிய பங்காற்றிய தலைவர்களில் ஒருவராக அமரர் சிவ சிதம்பரம் நினைவுகூரப்பட்டதுடன், அவரது அரசியல் அர்ப்பணிப்பு, சமூக சேவை மற்றும் மக்களுக்காக ஆற்றிய பங்களிப்புகள் குறித்து கலந்துகொண்டவர்கள் தமது அஞ்சலி உரைகளில் எடுத்துரைத்தனர்.




