எரிபொருள் நிலைய ஊழியரை தாக்கிய நபர் கைது – பின்னர் எச்சரிக்கையுடன் விடுவிப்பு

கொழும்பு மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னிப்பிட்டியாவில் அமைந்துள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் ஊழியர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் 3 ஆம் திகதி பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட்டை, மதிவெல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணைகளின் படி, குறித்த நபர் எரிபொருள் பெறுவதற்காக எரிபொருள் நிலையத்திற்கு சென்றபோது தேவையான கியூஆர் குறியீடு இல்லாமல் எரிபொருள் கோரியுள்ளார். இதற்கு, விதிமுறைகளுக்கு அமைவாக கியூஆர் குறியீடு இன்றி எரிபொருள் வழங்க முடியாது என ஊழியர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், பின்னர் ஊழியர் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மிரிஹான பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்து சந்தேகநபரை கைது செய்துள்ளனர். எனினும், தாக்குதலுக்கு உள்ளான ஊழியர் இந்த விவகாரத்தை சுமூகமாகத் தீர்க்க விரும்புவதாகவும், மேலதிக சட்ட நடவடிக்கைகளை தொடர விருப்பமில்லை என்றும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, சந்தேகநபருக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பான பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




