செம்மணி மனித புதைகுழி அகழாய்வில் மேலும் 2 எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழாய்வுப் பணிகளின் போது இன்று மேலும் இரண்டு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகளின் 24ஆவது நாள் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன. இதன்போது ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளில், ஒரு குழந்தை மற்றும் நான்கு சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உட்பட மொத்தம் ஏழு எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், அகழ்வுப் பணிகளின் போது புதிதாக இரண்டு மனித எலும்புக்கூடுகளும் கண்டறியப்பட்டுள்ளன. இதன் மூலம் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 355 ஆக உயர்ந்துள்ளது.
அவற்றில் 341 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, அகழாய்வுப் பணிகளில் இதுவரை ருகுணு பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்று வந்த நிலையில், இன்று முதல் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ், பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான தொல்லியல் மற்றும் ஆய்வுக் குழுவினரால் செம்மணி மனித புதைகுழி அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த அகழாய்வு நடவடிக்கைகள் உள்நாடு மற்றும் சர்வதேச மட்டங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், எதிர்கால ஆய்வுகள் மூலம் மேலும் முக்கிய தகவல்கள் வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.




