இலங்கையில் எரிபொருள் விலை செப்டெம்பர் வரை குறைய வாய்ப்பு இல்லை

உலக சந்தையில் அண்மைக் காலமாக மசகு எண்ணெய் விலைகள் குறைவடைந்திருந்தாலும், இலங்கையில் எரிபொருள் விலைகள் செப்டெம்பர் மாதத்திற்கு முன் குறைய வாய்ப்பில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
கூட்டுத்தாபனத்தின் தவிசாளர் மயூரா நெத்திகுமாரகே இன்று (29) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, இந்த மாதத்திலோ அல்லது செப்டெம்பர் மாதம் வரை விலை குறைப்பு எதிர்பார்க்க முடியாது எனவும், விலை அதிகரிப்பு ஏற்படுமா என்பது தற்போது உறுதியாக கூற முடியாது எனவும் தெரிவித்தார்.
சர்வதேச சந்தை நிலவரங்கள் ஒவ்வொரு மாத இறுதியிலும் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. வழக்கமாக 31ஆம் திகதி விலை மாற்ற முடிவுகள் எடுக்கப்படுவதாக இருந்தாலும், இந்த மாதம் ஞாயிற்றுக்கிழமை வருவதால், உலக சந்தை நிலவரங்களை கவனத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் என அவர் கூறினார்.
மேலும், விலை உயர்வு அல்லது குறைப்பு குறித்து பல சுற்று ஆய்வுகள் நடைபெற வேண்டியிருப்பதால், தற்போது எந்தத் தீர்மானத்தையும் அறிவிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், பெரிய அளவிலான விலை உயர்வு ஏற்படும் வாய்ப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னைய காலத்துடன் ஒப்பிடுகையில், தற்போதைய எரிபொருள் விலைகள் குறைந்துள்ளன. ஆனால், யுத்தத்திற்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது அவை இன்னும் அதிகமாகவே உள்ளன எனவும் அவர் விளக்கினார்.
அவர் மேலும் கூறுகையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு கொள்கலன் டீசல் 290 அமெரிக்க டொலராக இருந்தது. தற்போது அது 140 முதல் 150 டொலர் வரை குறைந்துள்ளது. ஆனால், யுத்தத்திற்கு முன்பு இது 80–90 டொலர் மட்டுமே இருந்தது.
எரிபொருள் கொள்வனவுகள் ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் வரை இறுதி செய்யப்பட்டுள்ளதால், செப்டெம்பர் மாதம் வரை நாட்டில் போதுமான கையிருப்பு இருப்பதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.




