
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் தொடர்ச்சியான மழையினால், 13 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, குறித்த எச்சரிக்கை நாளை (16) மாலை 4.00 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை, கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை, மொனராகலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மலைச்சரிவுகள், மண்மேடுகள் மற்றும் நீரோட்டப் பகுதிகளுக்கு அருகில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், கடும் மழை தொடரும் பகுதிகளில் திடீர் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடும் என்பதால், அவசர அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.




