காலி முகத்திடலில் 5,000 கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்வு – உலக சாதனை முயற்சி அரங்கேற்றம்

கொழும்பு காலி முகத்திடலில் இன்று நடைபெற்ற பிரம்மாண்டமான பரதநாட்டிய நிகழ்வில் சுமார் 5,000 கலைஞர்கள் பங்கேற்று உலக சாதனை முயற்சியை வெற்றிகரமாக அரங்கேற்றியுள்ளனர்.
இந்த மாபெரும் நிகழ்வை இந்தியாவைச் சேர்ந்த ‘சங்கமம் குளோபல் அகடமி’ மற்றும் இலங்கையின் ‘சங்கமிழ் லியா ஹொலிடேஸ்’ நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
உலகின் மிகப்பெரிய பரதநாட்டியப் பயிற்சி நிகழ்வாக கின்னஸ் உலகச் சாதனையில் இடம்பெறுவதற்கான முயற்சியாக இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. பல்வேறு வயதுப் பிரிவுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கலைஞர்கள் ஒரே இடத்தில் ஒன்றிணைந்து பரதநாட்டிய அசைவுகளை நிகழ்த்தியமை பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
பாரம்பரிய கலை மற்றும் கலாசாரத்தை உலக அரங்கில் எடுத்துக்காட்டும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு, இலங்கையின் கலாசார வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது.
கின்னஸ் உலகச் சாதனை அமைப்பின் அதிகாரப்பூர்வ மதிப்பீட்டிற்குப் பின்னர், இந்த முயற்சி புதிய உலகச் சாதனையாக அங்கீகரிக்கப்படுமா என்பது தொடர்பான இறுதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வு காலி முகத்திடலில் கலை, கலாசாரம் மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாக அமைந்துள்ளது.






