வவுனியாஇலங்கைவடக்கு மாகாணம்

மாணவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு – வவுனியாவில் தனியார் தாதியர் கல்லூரி நிர்வாகிகள் 5 பேர் கைது

Desktop Image Mobile Image

வவுனியாவில் இயங்கி வந்த தனியார் தாதியர் கல்லூரி ஒன்றின் நிர்வாகிகள் ஐந்து பேர், மாணவர்களிடம் பெருமளவு பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா வைரவபுளியங்குளம் 7ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள குறித்த தனியார் தாதியர் கல்லூரியில் தாதியர் கற்கைநெறிக்காக பல மாணவர்கள் இணைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கற்கைநெறியில் இணைந்த ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் தலா ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகை தவணை முறையில் அறவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டபோது, பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் மாணவர்களுக்கு அரச அங்கீகாரம் பெற்ற TVEC (Tertiary and Vocational Education Commission) சான்றிதழ் வழங்கப்படும் என நிர்வாகத்தினரால் உறுதியளிக்கப்பட்டிருந்தது.

 

 

எனினும், கற்கைநெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கு நீண்ட காலமாகியும் குறித்த அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த மாணவர்களுக்கும் கல்லூரி நிர்வாகத்தினருக்கும் இடையே நேற்று கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதுடன், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலையும் உருவானது.

 

 

சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், மாணவர்களை தவறாக வழிநடத்தி பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கல்லூரி நிர்வாகிகள் ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

 

இந்த சம்பவம் வவுனியா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பாதிக்கப்பட்ட மாணவர்கள் தமக்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Back to top button