அம்பலாந்தோட்டையில் குடும்பத் தகராறு விபரீதம் – மாமனாரின் தாக்குதலில் மருமகன் உயிரிழப்பு

அம்பலாந்தோட்டை மல்பெத்தாவ பகுதியில் குடும்பத் தகராறு பின்னணியில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக அவரது மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் மாமண்டல, ஜன்ஸாகம பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பசிந்து உதயங்க அபேரத்ன என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, உயிரிழந்தவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே நீண்டகாலமாக குடும்பத் தகராறு நிலவி வந்துள்ளது. இதன் காரணமாக மனைவி தனது பெற்றோரின் மல்பெத்தாவ இல்லத்தில் தங்கி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இரவு உயிரிழந்தவர் டிப்பர் ரக பாரவூர்தியில் மனைவியின் பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வீட்டின் பிரதான நுழைவாயில் கதவை வாகனத்தால் மோதி சேதப்படுத்திய பின்னர் வீட்டிற்குள் நுழைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்பின் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், அவரைத் தாக்க முயன்றதாகவும், தப்பிக்க முயன்ற மனைவி வீட்டின் அறையொன்றுக்குள் சென்றபோதும் அவரைத் துரத்தியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சூழ்நிலையில், தனது மகளைக் காப்பாற்றுவதற்காக மாமனார் அருகில் இருந்த தடியால் மருமகனின் தலையில் தாக்கியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காயமடைந்த இளைஞர் அம்பலாந்தோட்டை அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் அம்பலாந்தோட்டை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக சந்தேகநபரான மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




