வவுனியா தோணிக்கலில் ஒரே வீட்டில் தாய் மற்றும் மகன் சடலமாக மீட்பு

வவுனியா தோணிக்கல் பகுதியில் ஒரே வீட்டிலிருந்து தாய் ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதுடன், அவரது பெறாமகன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (19.09.2026) மாலை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வீட்டில் தாயும் அவரது பெறாமகனும் இருந்துள்ளனர். மாலை நேரத்தில் உறவினர்கள் இருவர் வீட்டிற்கு சென்றபோது, தாய் வீட்டின் பிரதான அறையில் இரத்தக்காயங்களுடன் விழுந்து கிடந்துள்ளார்.
உடனடியாக அவர் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, வீட்டின் மற்றுமொரு அறையில் அவரது பெறாமகன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, வவுனியா பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர்கள் தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த 60 வயதான அலஸ்கிறின் என்ற பெண்ணும், அவரது 35 வயதுடைய பெறாமகனான அஜந்தன் என்ற இளைஞரும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், இளைஞர் தனது தாயை கத்தியால் குத்தியிருக்கலாம் என்றும், பின்னர் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், சம்பவத்தின் பின்னணி மற்றும் முழுமையான காரணம் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!




