யாழில் அலுவலகம் சென்ற பெண் உத்தியோகத்தர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை நாளில் அலுவலகப் பணிக்காக சென்றிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடுவில் பிரதேச செயலகத்தின் சுதேச மருத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றிய 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான நிசாந்தன் சிந்துப்பிரியாவே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
அரச அலுவலகங்களுக்கு இடையில் நடைபெறும் உற்பத்தித்திறன் போட்டியில் பங்கேற்பதற்காக உடுவில் பிரதேச செயலகத்தை அழகுபடுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.
இதற்கமைய, போட்டிக்கான மதிப்பீடுகள் திங்கட்கிழமை நடைபெறவிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை அலுவலகத்திற்கு வருமாறு ஊழியர்களுக்கு WhatsApp ஊடாக அறிவிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து அலுவலகத்திற்கு சென்ற நிசாந்தன் சிந்துப்பிரியா, அங்கிருந்த மூலிகைத் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது அப்பகுதியில் காணப்பட்ட பாதுகாப்பற்ற மின் கசிவு நீருடன் தொடர்பு கொண்டதாகவும், இதனால் அவர் மீது மின்சாரம் தாக்கியிருக்கலாம் எனவும் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின்சாரம் தாக்கிய நிலையில் உடனடியாக மீட்கப்பட்ட அவர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், வைத்தியசாலையை அடைவதற்கு முன்னரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாளில் அலுவலகப் பணிக்காக அழைக்கப்பட்ட நிலையில் இளம் பெண் உத்தியோகத்தர் ஒருவர் இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சக உத்தியோகத்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




