
கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டிய மாப்பாகந்தா பிரதான வீதியில் இன்று (04) காலை இடம்பெற்ற துயரமான விபத்தில், முச்சக்கர வண்டி மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் மூவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பாடசாலை மாணவர் ஒருவரும், இரண்டு பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேவேளை, முச்சக்கர வண்டி சாரதி உயிர் தப்பியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாப்பாகந்தா பகுதியிலிருந்து நாவலப்பிட்டிய நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது, பிரதான வீதிக்கு அருகில் இருந்த பெரிய மரம் திடீரென முறிந்து விழுந்ததே இந்த விபத்திற்குக் காரணமாகியுள்ளது.
விபத்து தொடர்பான தகவல் கிடைத்தவுடன் நாவலப்பிட்டி பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பின்னர், சாலையில் விழுந்த மரம் வெட்டி அகற்றப்பட்டதுடன், உயிரிழந்தவர்களின் உடல்கள் நாவலப்பிட்டி மாவட்ட பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில், நீண்ட காலமாக சேதமடைந்த நிலையில் காணப்பட்ட இந்த மரத்தை அகற்றுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக பிரதேசவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படாததன் விளைவாகவே இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




