மன்னார் மடு அன்னையின் திருவிழா கோலாகலம்: திருப்பலியில் திரண்ட 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள்

மன்னார் மருதமடு அன்னையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணித் திருவிழா இன்று (15) சனிக்கிழமை பக்தர்களின் பெரும் பங்கேற்புடன் நடைபெற்றது.
ஆவணித் திருவிழாவை முன்னிட்டு காலை 6.15 மணிக்கு விசேட திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோர் தலைமையில் இந்த கூட்டுத்திருப்பலி இடம்பெற்றது.
பதுளை மறைமாவட்ட ஆயர் யூட் நிஷாந்த சில்வா, மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் அனுராதபுரம் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் நோபட் அன்ராடி ஆண்டகை ஆகியோரும் திருப்பலியில் இணைந்து கொண்டனர்.
திருப்பலி நிறைவடைந்த பின்னர் மடு அன்னையின் திருச்சொரூப பவனி இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு மடு அன்னையின் ஆசி வழங்கப்பட்டது.
இம்முறை திருவிழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 10 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பெருந்திரளான பக்தர்கள் ஒன்றுகூடியிருந்த நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருவிழா நிகழ்வுகள் இடம்பெற்றன.
மடு அன்னையின் ஆவணித் திருவிழாவை முன்னிட்டு பல நாட்களாக பக்தர்கள் மடு தேவாலயத்தை நோக்கி வருகை தந்திருந்த நிலையில், இன்று நடைபெற்ற பிரதான திருப்பலியிலும் பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டனர்.



