காணாமல் போன வனவளத் திணைக்கள அதிகாரி கிணற்றில் சடலமாக மீட்பு

கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் காணாமல் போயிருந்த வனவளத் திணைக்கள அதிகாரி ஒருவர் பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர் அனுராதபுரம் தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஆரட்சி பன்டாரகே சந்திர வன்சல கோசல விஜய சேகர என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் கிளிநொச்சி ஜெயபுரத்தில் அமைந்துள்ள வட்டார வனவளத் திணைக்கள அலுவலகத்தில் கடமையாற்றி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அதிகாரி கடந்த சில நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில், இது தொடர்பாக அவரது காணாமற்போனமை குறித்து நேற்று முன்தினம் ஜெயபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் மற்றும் விசாரணை நடவடிக்கைகளின் போது, நேற்று மாலை அலுவலகத்திற்கு அருகிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சடலம் மேலதிக நீதிமருத்துவ மற்றும் விசாரணை நடவடிக்கைகளுக்காக மீட்கப்பட்டுள்ளதுடன், உயிரிழப்பிற்கான காரணம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜெயபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




