வவுனியாவில் பெண் மீது பாலியல் வன்முறை மற்றும் கொள்ளை: இருவர் கைது

வவுனியா – மடுகந்தை, மயிலங்குளம் பகுதியில் வீடு புகுந்து 51 வயதுடைய பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி, பெருமளவான சொத்துக்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 8ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கொள்ளையிடப்பட்டதாகக் கூறப்படும் பல பெறுமதியான பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட பொருட்களில் சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரத்தினக்கல், 15 பவுண்டுகளுக்கும் அதிகமான தங்க நகைகள், 5 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், வாகனப் புத்தகங்கள் மற்றும் காணி உறுதிப்பத்திரங்கள் உள்ளிட்டவை அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், அவரது சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்ட குடும்ப அல்லது தனிப்பட்ட முரண்பாடுகள் சம்பவத்துக்குப் பின்னணியாக இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இருவரிடமும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், இந்தக் குற்றச்செயலில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் வவுனியா குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.




