மொனராகலையில் அதிகாலை கோர விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 5 பேர் பலி

மொனராகலை, கும்புக்கன பகுதியில் இன்று (21) அதிகாலை இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
வெல்லவாய – மொனராகலை பிரதான வீதியின் கும்புக்கன, களு பாலம் பகுதியில் வெல்லவாய நோக்கிப் பயணித்த டிப்பர் வண்டி, எதிர்த்திசையில் வந்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின்போது உழவு இயந்திரத்தில் 10 பேர் பயணித்துள்ளனர். அவர்களில் எட்டுப் பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 21, 26, 31, 55 மற்றும் 56 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் தொடங்கஸ்லந்த, புத்தல மற்றும் ஹொரபொக்க பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த ஏனைய மூவரும் மொனராகலை வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
யாத்திரிகள் குழுவை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரமே விபத்தில் சிக்கியதாக தெரியவருகின்றது. விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வண்டி சாரதி மற்றும் உழவு இயந்திர சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




