வவுனியாஇலங்கைசெய்திகள்வடக்கு மாகாணம்

வவுனியாவில் டெங்கு பரவல் தீவிரம் – 67 பேர் பாதிப்பு; சுகாதாரத் துறையின் அவசர எச்சரிக்கை!

Desktop Image Mobile Image

வவுனியா மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதுடன், குறிப்பாக வவுனியா நகரைச் சூழவுள்ள பகுதிகளில் நோய் பரவல் வேகமாக தீவிரமடைந்து வருவதாக மாவட்ட சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்டத்தின் தற்போதைய நிலவரப்படி, இதுவரை 67 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அதிகாரிகளின் தரவுகளின்படி, வவுனியா நகரை ஒட்டியுள்ள கிராமங்கள் மற்றும் மக்கள் நெருக்கமாக வாழும் குடியிருப்புப் பகுதிகளிலேயே டெங்கு பரவல் அதிகமாக பதிவாகியுள்ளது.

 

தற்போதைய காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் தூய்மையின்மை காரணமாக டெங்கு நுளம்புகளின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்கள் தங்களது வீடுகள், வணிக நிலையங்கள் மற்றும் பொது இடங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்றும், நீர் தேங்கி நிற்கக்கூடிய பாத்திரங்கள், பழைய டயர்கள், சிரட்டைகள் உள்ளிட்ட நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் சுகாதாரப் பிரிவினர் வலியுறுத்தியுள்ளனர்.

 

மேலும், டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் சுயமருத்துவத்தில் ஈடுபடாமல் உடனடியாக அருகிலுள்ள அரச மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, தற்போது நிலவும் வானிலை மாற்றத்தால் எதிர்வரும் ஒகஸ்ட் மாத நடுப்பகுதி வரை டெங்கு பரவலுக்கான அதிக அபாயம் காணப்படக்கூடும் என சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும், வீடுகள், பாடசாலைகள் மற்றும் பணியிடங்களைச் சுற்றியுள்ள வளாகங்களை நுளம்புகள் பெருகாதவாறு சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

மேலும், தற்போது கம்பஹா மாவட்டத்திலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாடு முழுவதும் நிலவும் டெங்கு அபாயத்தை கருத்திற்கொண்டு, 11 மாவட்டங்களை இலக்கு வைத்து இன்று (16) முதல் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர, அடுத்த இரண்டு வாரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் தொடர்ச்சியான டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button