அரசு ஊழியர்களுக்கு மீண்டும் Work From Home திட்டம்? பரிசீலனையில் அரசாங்கம்

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் அதிகரித்து வரும் இறக்குமதிச் செலவுகளை சமாளிக்க, கொரோனா காலத்தில் போலவே மீண்டும் அரச மற்றும் தனியார் துறைகளுக்கு வீட்டிலிருந்து பணியாற்றும் (Work From Home) முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரக்கூடும் என அரசாங்க உத்தியோகபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போதைய நிலையில் குறிப்பாக டீசல் உள்ளிட்ட எரிபொருள் பயன்பாட்டை குறைத்து செலவைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
அண்மைய நாட்களில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. டொலரின் கொள்முதல் விலை 342.63 ரூபாவாகவும், விற்பனை விலை 354.03 ரூபாவாகவும் உயர்ந்துள்ளது.
மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, நிலைமை மேலும் மோசமடைந்தால் தேவையான தலையீடுகள் மேற்கொள்ளப்படும் என முன்னதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலைமைக்கு மத்திய கிழக்கு பிராந்திய போரின் தாக்கம் உள்ளிட்ட காரணிகள் இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனால் இறக்குமதிச் செலவு, ஏற்றுமதி வருமானத்தை விட அதிகரித்து வருகிறது.
இதேவேளை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் எரிபொருள் இறக்குமதிக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாக செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஆண்டு வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
CPC தலைவர் டி.ஜே. ராஜகருணா, ஏப்ரல் மாதத்தில் மட்டும் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளுக்காக 522 மில்லியன் டொலர் செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போது எரிபொருள் விநியோகம் சீராக இருப்பதாகவும், உலக சந்தை விலை உயர்வே முக்கிய சவாலாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




