
சமூக வலைத்தளங்கள் மூலம் வீடுகள் கட்டித் தருவதாக விளம்பரப்படுத்தி, பொதுமக்களிடம் இருந்து பெருமளவிலான பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் மிரிஹான விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் தகவலின்படி, குறித்த நபர் வீடுகளை கட்டித் தருவதாகக் கூறி பலரிடமிருந்து பணத்தை பெற்றுள்ளார். பின்னர் உறுதியளித்தபடி வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்காமல் பணத்தை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோசடி நடவடிக்கை மூலம் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 25 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபருக்கு எதிராக இதுவரை 15 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதையடுத்து மிரிஹான விசேட விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
மோசடி செய்யப்பட்ட பணத்தின் அளவு மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பான மேலதிக தகவல்களையும் பொலிஸார் திரட்டி வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.




