வவுனியா மாநகர முதல்வர் விவகாரம்: ஆளுநரின் உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீடிப்பு

வவுனியா மாநகர சபை முதல்வரைப் பதவி நீக்கம் செய்ய வட மாகாண ஆளுநர் மேற்கொண்ட தீர்மானத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இடைக்காலத் தடைக்கட்டளை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மேல் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கில், இடைக்காலத் தடையை நீக்குமாறு எதிர்மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதற்கு மனுதாரர் தரப்பில் மறுஆட்சேபனை முன்வைக்கப்பட்ட நிலையில், இடைக்காலத் தடையை தொடர்ந்து பேணுவதா அல்லது ரத்து செய்வதா என்பது தொடர்பில் இருதரப்பினரும் விரிவான வாதங்களை முன்வைத்தனர்.
வழக்கில் இருதரப்பு எழுத்துமூல சமர்ப்பணங்களையும் ஆகஸ்ட் 28ஆம் திகதிக்குள் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் பணிப்புரை வழங்கியுள்ளது.
அதனைத் தொடர்ந்து, இடைக்காலத் தடைக்கட்டளை தொடர்பான இறுதி உத்தரவு செப்டெம்பர் 9ஆம் திகதி அறிவிக்கப்படும் என மனுதாரர் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதனால், செப்டெம்பர் 9ஆம் திகதி வரை ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடைக்கட்டளை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். அதன் பின்னரே பிரதான வழக்கு விசாரணை தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




