
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த விவாகரத்து மனுவை சங்கீதா வாபஸ் பெற்றதாகவும், இதையடுத்து குறித்த வழக்கை முடித்து வைப்பதாக நீதிமன்றம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், விஜய் தரப்பில் அவர் நேரில் ஆஜராக விலக்கு கோரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், நீதிமன்றம் அவரை சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்த பின்னர் ஆஜராகுமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், சங்கீதா விவாகரத்து மனுவைத் திரும்பப் பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, விஜய் மற்றும் சங்கீதா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து இந்த விவாகரத்து மனு தொடர்பான செய்திகள் கவனம் பெற்றிருந்தன.
இன்றைய விசாரணையின்போது இரு தரப்பினரும் நேரில் ஆஜராகாமல், அவர்களது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சங்கீதா வெளிநாட்டில் இருந்த நிலையில் வீடியோ கான்பரன்ஸ் ஊடாக நீதிமன்ற நடவடிக்கையில் பங்கேற்று மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்ததாகவும், இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.



