கிளிநொச்சி முதல் மாத்தறை வரை 500 கி.மீ. – கின்னஸ் சாதனைக்கு ஓடும் கெத்ரின்

பிரித்தானியாவின் சிரென்செஸ்டர் நகரில் பிறந்த கெத்ரின், கிளிநொச்சியிலிருந்து மாத்தறை வரை 500 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்தை வெறும் 110 மணிநேரத்திற்குள் ஓடிக் கடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த 15ஆம் திகதி தனது பயணத்தை ஆரம்பித்த கெத்ரின், 19ஆம் திகதி மாத்தறையை சென்றடைவதை இலக்காகக் கொண்டு ஓடிவருகிறார். இந்த பிரிவில் இதுவரை கின்னஸ் உலக சாதனை பதிவு செய்யப்படாததால், தனது முயற்சியின் மூலம் புதிய சாதனை ஒன்றை உருவாக்குவதே அவரது இலக்காக உள்ளது.
இலங்கையின் வெப்பமான காலநிலை மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக, இரவு நேரங்களை அதிகளவில் பயன்படுத்தி ஓட்டப்பயணத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பகல் நேரங்களில் குறுகிய ஓய்வு நேரங்களை மாத்திரம் எடுத்துக்கொண்டு, தினமும் 100 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்தை கடந்து வருவதாக கூறப்படுகிறது.
இலங்கையின் பல்வேறு பகுதிகளை ஊடறுத்துச் செல்லும் இந்த பயணத்தில் வனவிலங்குகளால் ஏற்படக்கூடிய ஆபத்துகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளதால், யானைகள், பாம்புகள், சிறுத்தைகள் உள்ளிட்ட விலங்குகளிடமிருந்து பாதுகாப்பை வழங்குவதற்காக சிறப்பு குழுவொன்று அவரை பின்தொடர்கிறது.
அதேவேளை, நீண்ட நேரம் ஓடுவதற்குத் தேவையான உணவு மற்றும் நீர்ச்சத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கெத்ரினின் பயணத்தை உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதரவாளர்கள் Garmin Tracker ஊடாக நேரலையில் கண்காணித்து வருகின்றனர். இதன் மூலம் அவரது தற்போதைய இருப்பிடம் மற்றும் ஓட்டப்பயணத்தின் முன்னேற்றத்தை அறிந்துகொள்ள முடிகிறது.
கின்னஸ் உலக சாதனை முயற்சியாக மட்டுமன்றி, இலங்கையில் ஆதரவற்ற மற்றும் பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களுக்காக செயற்படும் ‘Their Future Today’ தொண்டு நிறுவனத்துக்கு நிதி திரட்டுவதையும் இந்த ஓட்டப்பயணத்தின் மூலம் கெத்ரின் மேற்கொண்டு வருகிறார்.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!




