தரமற்ற டயப்பர்கள் விற்பனை – 5 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.140,000 அபராதம்

சந்தையில் கொள்வனவு செய்யப்பட்ட சில குழந்தைகளுக்கான டயப்பர்களை பயன்படுத்தும்போது அவை சிதைந்து கிழிவதாக நுகர்வோரிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து, நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை விசாரணைகள் மற்றும் சுற்றிவளைப்புகளை முன்னெடுத்துள்ளது.
இதன்போது, இறக்குமதியாளரின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் அல்லது இணையத்தள விபரங்கள் குறிப்பிடப்படாமல், பணிப்புரை இலக்கம் 85ஐ மீறி குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான டயப்பர்களை விற்பனைக்கு வைத்திருந்ததாகவும் விநியோகித்ததாகவும் கூறப்படும் 5 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் வழக்குப் பொருட்களாக சமர்ப்பிக்கப்பட்டவற்றில் பல்வேறு அளவுகளிலான குழந்தைகளுக்கான டயப்பர்கள் மற்றும் Baby Pants பொதிகள் 81 மற்றும் பெரியவர்களுக்கான பாதுகாப்பு டயப்பர் பொதிகள் 6 அடங்கியிருந்தன. இதன்படி மொத்தமாக குறைந்தது 87 பொதிகள் வழக்குப் பொருட்களாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த வழக்குகள் நேற்று 16ஆம் திகதி கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இலக்கம் 05இல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதன்போது குற்றச்சாட்டுகளை வர்த்தக நிலையங்கள் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, 5 வர்த்தக நிலையங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த 5 வர்த்தக நிலையங்களுக்கும் விதிக்கப்பட்ட மொத்த அபராதத் தொகை 140,000 ரூபாயாகும். அத்துடன், வழக்குப் பொருட்களாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து டயப்பர் பொதிகளையும் அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டயப்பர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது, பொதியில் குறிப்பிடப்பட்டுள்ள இறக்குமதியாளர் விபரங்கள் உள்ளிட்ட லேபிள் தகவல்களை நுகர்வோர் கவனமாகச் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பொருட்களை பயன்படுத்தும்போது அசாதாரணமாக சிதைதல், கிழிதல் அல்லது தரம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டால், இயன்றவரை பொருளின் பொதியையும் கொள்வனவு செய்த பற்றுச்சீட்டையும் பாதுகாத்து அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான முறைகேடுகள் தொடர்பில் 1977 என்ற குறுந்தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!




