வவுனியா மேயர், சாவகச்சேரி உப தவிசாளர் பதவி நீக்கம்

வவுனியா மாநகர சபையின் மேயர் சு. காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞா. கிசோர் ஆகியோர் தங்களது பதவிகளில் இருந்தும், உறுப்பினர் பதவிகளிலிருந்தும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் இதற்கான உத்தியோகபூர்வ உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இருவரின் நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் நடத்தை தொடர்பாக பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசேட விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது.
அந்த ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையும் அதில் முன்வைக்கப்பட்ட முக்கிய பரிந்துரைகளும் பரிசீலிக்கப்பட்டதன் பின்னர், சம்பந்தப்பட்ட இரு உள்ளூராட்சி பிரதிநிதிகளையும் பதவிகளில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வவுனியா மாநகர சபை மேயர் சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்கள், 1947 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க உள்ளூராட்சி மன்றங்கள் கட்டளைச் சட்டத்தின் 277 ஆம் பிரிவும், 1989 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க மாகாண சபைகள் (தொடர்புடைய ஏற்பாடுகள்) சட்டத்தின் 2 ஆம் பிரிவும் வழங்கியுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், 2026 ஜூன் 24 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மேயர் மற்றும் உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
விசாரணை அறிக்கையின் அடிப்படையில், அவர் மேயராகத் தொடரத் தகுதியற்றவர் எனத் திருப்தியடைந்ததாக ஆளுநர் அறிவித்துள்ளார்.
இந்த பதவி நீக்க நடவடிக்கை வடக்கு மாகாண உள்ளூராட்சி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அரசியல் மற்றும் நிர்வாக மட்டங்களிலும் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.




