வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கம்

லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்கள் காரணமாக தலைநகர் கராகஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
உள்ளூர் நேரப்படி ஜூன் 24 ஆம் திகதி மாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்கள் ரிச்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 ஆக பதிவாகியுள்ளன. வெறும் 39 விநாடிகள் இடைவெளியில் ஏற்பட்ட இந்த இரட்டை அதிர்வுகள், கடந்த நூற்றாண்டில் வெனிசுலாவை தாக்கிய மிக வலுவான நிலநடுக்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.
நிலநடுக்கத்தின் தாக்கத்தால் தலைநகர் கராகஸில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் வர்த்தக வளாகங்கள் இடிந்து விழுந்துள்ளதுடன், பல பகுதிகள் தூசி மண்டலமாக மாறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் (USGS) உயிரிழப்புகள் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக எச்சரித்துள்ள நிலையில், ஆரம்ப கட்ட மதிப்பீடுகளின்படி உயிரிழப்புகள் ஆயிரக்கணக்கில் உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அதிகாரபூர்வமாக குறைந்தது 32 பேர் உயிரிழந்ததுடன், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிலநடுக்கத்தையடுத்து கரீபியன் கடற்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் பின்னர் அது வாபஸ் பெறப்பட்டது.
மேலும், நாட்டின் முக்கிய சர்வதேச நுழைவாயிலான சைமன் பொலிவர் சர்வதேச விமான நிலையம் சேதமடைந்ததால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், பாடசாலைகளும் சில நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல பிந்தைய அதிர்வுகள் பதிவாகியுள்ளதால் மக்கள் வீடுகளுக்குள் செல்ல அச்சமடைந்து திறந்த வெளிகளிலேயே தங்கியுள்ளனர்.
இந்நிலையில், வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனப்படுத்தியதுடன், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவித்துள்ளார்.




