சுற்றுச்சூழல் பாதுகாப்பு: வவுனியாவில் விசேட பசுமை முயற்சி

பிளாஸ்டிக் கழிவுகள் அற்ற சுத்தமான மற்றும் பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்கும் நோக்கில், வவுனியா வெங்கல செட்டிகுளம் பிரதேச சபை ஒரு விசேட திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இதற்கமைய பொதுமக்களிடம் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை பணத்திற்கு கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளை வீதிகளிலோ அல்லது பொது இடங்களிலோ வீசி சுற்றாடலை மாசுபடுத்துவதைத் தவிர்க்குமாறு சபை கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்காக பிரதேச சபை வளாகத்தில் பிரத்தியேகமாக பிளாஸ்டிக் சேகரிப்பு மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில், கொண்டு வரப்படும் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படவுள்ளது
ஒவ்வொரு ஒரு கிலோகிராம் பிளாஸ்டிக் கழிவிற்கும் ரூபா 8.00 வீதமும் அதிகளவிலான (மொத்தமாக) பிளாஸ்டிக் கழிவுகளை ஒப்படைப்பவர்களுக்கு கிலோ ஒன்றிற்கு ரூபா 10.00 வீதம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பிளாஸ்டிக் மாசற்ற பிரதேசமாக மாற்றவும் பொதுமக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்களின் பிளாஸ்டிக் கழிவுகளை உரிய முறையில் ஒப்படைத்து ஒத்துழைப்பு வழங்குமாறு வவுனியா வெங்கல செட்டிகுளம் பிரதேச சபையின் தவிசாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
