
அடுத்த சில நாட்களில் எரிபொருள் விலையை கணிசமாக உயர்த்த வேண்டிய அவசியம் உள்ளது என பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
டீசல் ஒரு லீற்றரின் விலையை சுமார் ரூ.600 வரை உயர்த்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (25) இரவு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
டீசல் விலையை உயர்த்தாமல் தொடர்ந்தால் ரூபாய் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையும் என்றும், அது மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்தச் சுழற்சி கடந்த காலங்களில் நாட்டில் பொருளாதார நெருக்கடியை உருவாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை உயர்வு பணவீக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில், அதனை கட்டுப்படுத்த மானியக் கொள்கை அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவரது கருத்துப்படி, எரிபொருள் மானியம் அனைவருக்கும் வழங்கப்படாமல், தேவையுள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும்.
பொது போக்குவரத்தை பயன்படுத்தும் மக்களுக்கு பயண தூரத்தின் அடிப்படையில் டீசல் மானியம் வழங்க முடியும் எனவும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
பணக்காரர்களுக்கு மானியம் வழங்குவதை விட, பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் சாதாரண மக்களுக்கு உதவுவது சிறந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.




