உலக செய்திகள்

அமெரிக்காவில் B-52 குண்டுவீச்சு விமானம் விபத்து – 8 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்

Desktop Image Mobile Image

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் அமைந்துள்ள எட்வர்ட்ஸ் விமானப்படைத் தளத்தில் அமெரிக்க விமானப்படைக்குச் சொந்தமான B-52 Stratofortress ரக குண்டுவீச்சு விமானம் விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க நேரப்படி திங்கட்கிழமை காலை சுமார் 11.20 மணியளவில் எட்வர்ட்ஸ் விமானப்படைத் தளத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களுக்குப் பின்னரே விமானம் விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள புகைப்படங்கள் மற்றும் காணொளிகளில், விபத்து இடம்பெற்றதாகக் கூறப்படும் பகுதியில் இருந்து அடர்ந்த கரும்புகை வானில் எழுந்து பரவியுள்ளமை காணப்படுவதுடன், பல மைல்கள் தொலைவிலிருந்தும் அந்த புகை தென்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

சம்பவத்தைத் தொடர்ந்து அவசரகால மீட்புக் குழுக்கள் மற்றும் தீயணைப்பு பிரிவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டதுடன், மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த விபத்தில் விமானத்தில் பயணித்ததாகக் கூறப்படும் 8 பேர் உயிரிழந்திருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், உயிரிழப்புகள் அல்லது காயமடைந்தவர்கள் தொடர்பான உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் இதுவரை வெளியிடப்படவில்லை.

 

 

விபத்துக்கான காரணத்தை கண்டறியும் நோக்கில் அமெரிக்க விமானப்படை மற்றும் சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகள் இணைந்து விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

B-52 Stratofortress என்பது 1950களிலிருந்து அமெரிக்க விமானப்படையில் சேவையில் உள்ள நீண்ட தூர உத்திசார் குண்டுவீச்சு விமானமாகும். சுமார் 8,800 மைல்கள் வரை பறந்து சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட இந்த விமானம், அணு ஆயுதங்கள் உட்பட கனரக ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் பெற்றதாகக் கருதப்படுகிறது.

வியட்நாம் போர், வளைகுடாப் போர், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல முக்கிய இராணுவ நடவடிக்கைகளில் B-52 ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button