உலக செய்திகள்

AI தொழில்நுட்பத்தின் உதவியால் தலைப்பகுதியில் இணைந்திருந்த இரட்டைச் சகோதரிகள் வெற்றிகரமாகப் பிரிப்பு

Desktop Image Mobile Image

தலைப்பகுதியில் ஒன்றிணைந்த நிலையில் (Craniopagus) பிறந்த இரட்டைச் சகோதரிகள், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட பல கட்ட சிக்கலான அறுவை சிகிச்சைகள் மூலம் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.

‘மெர்சி’ (Mercy) மற்றும் ‘குட்னஸ்’ (Goodness) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தச் சிறுமிகள் தற்போது உடல்நலத்துடன் இருந்து, தங்களின் மூன்றாவது வயதில் இயல்பான வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடர்ந்துவருகின்றனர்.

2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நைஜீரியாவின் எகிட்டி (Ekiti) மாநிலத்தில் பிறந்த இவர்களின் மண்டையோடுகள் பிறக்கும் போதே ஒன்றோடொன்று இணைந்திருந்ததுடன், மூளைத் திசுக்கள் மற்றும் முக்கிய இரத்த நாளங்களும் பகிரப்பட்டிருந்ததாக ‘Gemini Untwined’ அமைப்பு தெரிவித்துள்ளது.

 

 

மண்டையோடு இணைந்த இரட்டையர்களுக்கான சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றுள்ள இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பில், சிறுமிகள் மேலதிக சிகிச்சைக்காக லண்டனிலுள்ள Great Ormond Street Hospital மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

அங்கு குழந்தைகள் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும், Gemini Untwined அமைப்பின் நிறுவனருமான பேராசிரியர் நூர் உல் ஓவாஸ் ஜிலானி தலைமையிலான மருத்துவக் குழு பல கட்டங்களாக அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டது.

 

 

அறுவை சிகிச்சைக்கு முன்பான திட்டமிடல், மூளை அமைப்புகளின் முப்பரிமாண மாதிரிகள் உருவாக்கம் மற்றும் இணைந்திருந்த மூளைத் திசுக்களை பாதுகாப்பாகப் பிரிப்பதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பல மாதங்கள் நீடித்த தயாரிப்புகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட இந்தச் சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், இது உலகளாவிய நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறையில் குறிப்பிடத்தக்க மருத்துவ முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

Related Articles

Back to top button