62 ஆண்டுகளுக்குப் பிறகு கடலில் இருந்து மீண்டும் வெளிப்பட்ட தனுஷ்கோடி தரைப்பாலம்

தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க தனுஷ்கோடி பகுதியில், கடலுக்குள் மூழ்கியிருந்த பழமையான தரைப்பாலத்தின் ஒரு பகுதி 62 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளிப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
1964ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவு புயலின் தாக்கத்தால் சேதமடைந்து கடலுக்குள் மறைந்திருந்த இந்த பாலத்தின் பகுதி தற்போது மீண்டும் தென்படத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முகுந்தராயர் சத்திரம் கடற்கரை பகுதியில் ஏற்பட்ட மண் அரிப்பே இந்த வரலாற்று கட்டமைப்பின் ஒரு பகுதி மீண்டும் வெளிப்பட காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
1964ஆம் ஆண்டில் தனுஷ்கோடியை தாக்கிய கடும் புயல் காரணமாக நகரம் பெரும் சேதத்துக்குள்ளானதுடன், பல வீடுகள், கட்டிடங்கள் மற்றும் அடிப்படை உட்கட்டமைப்புகள் கடலில் மூழ்கியிருந்தன. அந்த பேரிடர் இந்திய வரலாற்றில் மிகப்பெரிய இயற்கை அனர்த்தங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
தற்போது பல தசாப்தங்களுக்குப் பின்னர் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாலத்தின் பகுதி மீண்டும் வெளிப்பட்டுள்ளமை அப்பகுதி மக்களிடமும் சுற்றுலாப் பயணிகளிடமும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த நிகழ்வைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாகவும், விரைவில் தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்தப் பகுதியை ஆய்வு செய்யக்கூடும் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடலுக்குள் புதைந்துள்ள பழைய கட்டமைப்புகளின் மேலும் சில பகுதிகளும் எதிர்காலத்தில் வெளிப்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.




