வவுனியாஇலங்கைவடக்கு மாகாணம்
வவுனியா–திருநாவற்குளத்தில் தொடரும் மின்தடங்கல்; மக்கள் கடும் அவதி

வவுனியா – திருநாவற்குளம் பகுதியில் தொடர்ந்து தினமும் பல தடவைகள் மின்தடங்கல் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குறிப்பாக காலை நேரங்களில் அடிக்கடி மின்சாரம் தடைப்படுவதால், பாடசாலை மாணவர்கள் மற்றும் அரச, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
ஒரே நாளில் ஐந்துக்கும் மேற்பட்ட மின்தடங்கல்கள் ஏற்படுவதாகவும், இதனால் வீடுகளில் பயன்படுத்தப்படும் பல இலத்திரனியல் சாதனங்கள் சேதமடைந்து வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பிரச்சினை தொடர்பாக மின்சார சபையின் பாவனையாளர் சேவை பிரிவுக்கு பலமுறை அறிவித்திருந்த போதிலும், இதுவரை நிரந்தர தீர்வு வழங்கப்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.




