நச்சு இரசாயனத்தில் பழுக்க வைக்கும் பழங்களுக்கு விரைவில் புதிய சட்டம்

நச்சு இரசாயனங்களைப் பயன்படுத்தி பழங்களைச் செயற்கையாகப் பழுக்க வைக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் புதிய சட்ட ஏற்பாடுகள் விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் விவகார அதிகாரசபையுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட அவர், வாழைப்பழம், மாம்பழம், பப்பாளி உள்ளிட்ட பல்வேறு பழங்கள் இரசாயனங்களின் உதவியுடன் பழுக்க வைக்கப்பட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைத்து வருவதாக தெரிவித்தார்.
இந்தச் செயற்பாடுகள் பொதுச் சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இரசாயனப் பயன்பாட்டில் ஈடுபடும் கிடங்குகள் மற்றும் சேமிப்பு நிலையங்களில் அதிகாரிகள் நேரடி சோதனைகளை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்தார்.
வியாபாரிகளுக்கு ஏற்கனவே போதிய விழிப்புணர்வு வழங்கப்பட்டுள்ள நிலையிலும், லாப நோக்கில் சட்டவிரோதமாக இச்செயலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.




