வவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் நினைவு தின நிகழ்வு

தமிழ் மொழிக்கும் தமிழர் பண்பாட்டுக்கும் முக்கிய பங்களிப்புகளை வழங்கிய தமிழ் தூது தனிநாயகம் அடிகளாரின் 46ஆவது நினைவு தினம் வவுனியாவில் நினைவுகூரப்பட்டது.
வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள தனிநாயகம் அடிகளாரின் சிலை அருகே இந்த நினைவு நிகழ்வு நடைபெற்றது. வவுனியா மாநகர சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில், அவரது சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வைத் தொடர்ந்து தனிநாயகம் அடிகளாரின் வாழ்க்கை, தமிழ் மொழிக்காக அவர் ஆற்றிய பணிகள் மற்றும் அவரது சமூகப் பங்களிப்புகள் தொடர்பாக சிறப்புரையும் இடம்பெற்றது.
வவுனியா மாநகர சபை முதல்வர் சு.காண்டீபன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்கள் ரவீந்திரன், நீ.தர்மரட்னம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முன்னாள் செட்டிகுளம் பிரதேச சபையின் தவிசாளர் ஜெகதீஸ்வரன், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், தமிழ்மணி அகளங்கன், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இதில் பங்கேற்றிருந்தனர்.
தமிழ் மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுக்காக தனிநாயகம் அடிகளார் ஆற்றிய பணிகளை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.




