யாழ்ப்பாண ஆதீன பிரதித் தலைவர் மீது தாக்குதல் – வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவரான போதகர் அன்டனி செபஸ்டியன் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதலில் அவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (28) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தென்னிந்திய திருச்சபையின் செயலாளரான போதகரின் மகனே இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவராக தெரிவுசெய்யப்பட்ட போதகர் அன்டனி செபஸ்டியன், திருச்சபையின் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் இருந்து வருகை தந்த விசேட குழுவினரால் தென்னிந்திய திருச்சபையில் பணியாற்றும் போதகர்களின் குடும்பங்களுக்கான ஒன்றுகூடல் மற்றும் பயிற்சி நிகழ்வுகள் கடந்த சில நாட்களாக நடத்தப்பட்டுள்ளன.
நிகழ்வின் இறுதி நாளான நேற்று போதகர்களுக்கான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. கலந்துரையாடல் நிறைவடைந்து வெளியேறிய சந்தர்ப்பத்தில் பேராயர் மற்றும் ஏனைய போதகர்கள் முன்னிலையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலில் போதகரின் தலைப்பகுதி மூன்று முறை இலக்குவைக்கப்பட்டதாகவும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் நிர்வாகம் மற்றும் நிதி நடவடிக்கைகள் தொடர்பில் போதகர் அன்டனி செபஸ்டியன் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக செயற்குழு மற்றும் நிதிக்குழு கூட்டப்படாமல் நிதி பயன்படுத்தப்படுவது தொடர்பிலும் அவர் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், திருச்சபையின் நிர்வாக நடவடிக்கைகள், ஊழியர்களுக்கு ஏற்படும் இடையூறுகள் மற்றும் சில உறுப்பினர்களின் இடைநிறுத்தம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் அவர் குரல் கொடுத்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2ஆம் திகதி தனது பொறுப்பிலிருந்த தேவகிராமம் திருச்சபை பூட்டப்பட்டு வழிபாட்டுக்கு இடையூறு ஏற்பட்டதாகக் கூறி சுன்னாகம் பொலிஸ் நிலையத்திலும் அவர் முறைப்பாடு செய்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், நிர்வாகம் மற்றும் நிதிக்குழுவின் அனுமதியின்றி சுமார் 96 இலட்சம் ரூபாய் பெறுமதியான கார் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பிலும் அவர் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
இந்தப் பின்னணியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




