நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழப்பு 810 ஆக உயர்வு; 3,000 பேர் மாயம்

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவை ஏற்படுத்திய பெருவெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 810 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சுமார் 3,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களை தேடும் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 26ஆம் திகதி இமயமலையில் பனிப்பாறைகள் உடைந்ததைத் தொடர்ந்து நேபாளத்தின் பல நதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ரசுவா, தாதிங், நுவாகோட், கோர்க்கா, டானாஹன், நவல்பூர், பராசி மற்றும் சிட்வான் ஆகிய எட்டு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நேபாளம் மற்றும் சீனாவை இணைக்கும் பிரதான நெடுஞ்சாலையும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
நேபாளத்தில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்நாட்டின் நீர்மின் திட்டங்களில் பணியாற்றிய 898 தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களை தேடும் பணியில் உதவுவதற்காக இந்திய நிபுணர் குழுவொன்று நேபாளம் சென்றுள்ளது. திரிசூலி 3ஏ நீர்மின் திட்டப் பகுதியில் அமைந்துள்ள சுரங்கத்திற்குள் 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சுரங்கம் முழுவதும் சகதி மற்றும் மண் மூடியுள்ளதால் மீட்புப் பணிகளில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இந்திய நிபுணர்கள் சுரங்கத்தில் சுமார் 6 அங்குல அளவில் துளையிட்டு ஆக்சிஜன் செல்லும் வகையில் வழியை ஏற்படுத்தியுள்ளனர்.
மேலும், ஒருவர் நுழையும் அளவுக்கு சுரங்கத்தின் பக்கவாட்டில் நான்கு இடங்களில் துளையிடும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சுரங்கத்திற்குள் சென்று தொழிலாளர்களை மீட்க முடியும் என இந்திய நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவரை 810 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக சிட்வான் மாவட்டத்தில் 248 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டிட இடிபாடுகளில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் காத்மாண்டு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ள நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு ஹெலிகொப்டர்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் உணவுப் பொதிகள் மற்றும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
நீர்மின் நிலையத் திட்ட தொழிலாளர்கள் உட்பட சுமார் 3,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களை தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, இந்தியாவின் சார்பில் தடயவியல் மற்றும் மரபணு ஆராய்ச்சி நிபுணர்களும் நேபாளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். அடையாளம் காணப்படாத உடல்களை மரபணு பரிசோதனை மூலம் அடையாளம் கண்டு, அவற்றை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு அவர்கள் உதவுவார்கள் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.




