
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப்பெருக்கின் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்துள்ள நிலையில், இந்திய நதிகளில் இருந்து ஏழு சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் மகாராஜ்கஞ்ச் மற்றும் குஷிநகர் மாவட்டங்கள் ஊடாகப் பாயும் நதிகளில் இருந்தே இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தின் சிட்வான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள பகுதிகளில் இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் நான்கு அடையாளம் தெரியாத சடலங்களும், அங்கிருந்து சுமார் 70 கிலோமீற்றர் தொலைவில் உள்ள குஷிநகர் மாவட்டத்தில் மேலும் மூன்று சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கினால் நதிகளின் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட சடலங்களாக இவை இருக்கலாம் என மகாராஜ்கஞ்ச் மாவட்ட ஆட்சியர் கெளரவ் சிங் சோகர்வால் தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட சடலங்கள் நேபாளத்தைச் சேர்ந்தவர்களுடையதா அல்லது வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களுடையதா என்பதை உறுதிப்படுத்த அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரிடரால் இதுவரை 584 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 2,400க்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மீட்கப்பட்டுள்ள ஏழு சடலங்களும் இதுவரை நேபாளத்தின் உத்தியோகபூர்வ உயிரிழப்பு எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.




