
மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, அங்குள்ள முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர்த்தேக்கங்களுக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளதுடன், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஆறுகள், ஓடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் வழக்கத்தை விட அதிகளவில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஹட்டன் ஓயா, போடைஸ் ஓயா, காட்மோர் ஓயா, கெசல்கமு ஓயா மற்றும் மரே ஓயா உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
அதேபோல், மோகினி எல்ல, காட்மோர், மரே, டெவன் மற்றும் சென் கிளையர் உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளிலும் அதிகளவு நீர் கொட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், மலையகத்தில் உள்ள முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது.
மவுசாக்கலை நீர்த்தேக்கம் அதன் முழுக் கொள்ளளவை எட்டுவதற்கு சுமார் 4 அடி மட்டுமே எஞ்சியுள்ளதாகவும், காசல்ரீ நீர்த்தேக்கம் முழுக் கொள்ளளவை எட்டுவதற்கு சுமார் 2 அடி மட்டுமே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் கொத்மலை நீர்த்தேக்கம் ஏற்கனவே அதன் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கென்யோன், பிராட்லண்ட், லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல மற்றும் விமலசுரேந்திர உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்த்தேக்கங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், நாட்டின் நீர்மின் உற்பத்தி நிலையங்களிலும் அதிகளவு நீரைப் பயன்படுத்தி மின்சார உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.




