புத்தூரில் கோர விபத்து: 21 வயது இளைஞர் உயிரிழப்பு – இருவர் ஆபத்தான நிலையில்

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற பாரிய சாலை விபத்தில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, மட்டுவில் பகுதியில் இருந்து புத்தூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனத்துடன் திடீரென குறுக்கே சென்ற முச்சக்கர வண்டி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மோதலின் தாக்கம் கடுமையாக இருந்ததுடன், டிப்பர் வாகனம் முச்சக்கர வண்டியின் மீது ஏறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் முச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று இளைஞர்களும் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய வாசன் காஜானன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அதேவேளை, காயமடைந்த மற்றைய இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




