வீதி நாய்களை தாக்கியதாக குற்றச்சாட்டு – வங்கி அதிகாரி பெண் கைது

வீதி நாய்களை தாக்கி துன்புறுத்தியதாகக் கூறப்படும் அரச வங்கி அதிகாரி பெண் ஒருவர் மகரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ளவர் மகரகம, பத்திரகொட வீதியைச் சேர்ந்த பல்கலைக்கழக பட்டதாரியும், அரச வங்கி ஒன்றின் நிறைவேற்று தர அதிகாரியுமாவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதேசத்தில் உள்ள வீதி நாய்களை தடிகளால் தாக்கியதுடன், மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி அவற்றை மோதித் தள்ள முயன்றதாக குறித்த பெண் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிரதேசவாசிகள் வழங்கிய புகார்களின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
விசாரணைகளின் போது, கடந்த வெசாக் பௌர்ணமி தின இரவும் அதிகாலை நேரத்திலும் குறித்த பகுதியில் வீதி நாய்கள் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு (CCTV) கமெராக்களில் பதிவாகியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் எதிர்வரும் 10ஆம் திகதி கங்கொடவில நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.




