சச்சின், கோலியைவிட பெரிய சாதனைகள் படைப்பார் – வைபவ் சூர்யவன்ஷி குறித்து டேல் ஸ்டெய்ன் நம்பிக்கை

இந்திய இளம் கிரிக்கெட் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி, தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதியில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோரின் சாதனைகளைக் கூட மிஞ்சக்கூடிய வீரராக உருவெடுப்பார் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் பாராட்டியுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி, அனுபவம் மிக்க சர்வதேச தரப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு அச்சமின்றி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர், அதிக ஓட்டங்களை குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து ‘ஆரஞ்ச் தொப்பி’யையும் கைப்பற்றினார். அவரது அபாரமான செயல்பாடு காரணமாக இந்திய இருபது ஓவர் தேசிய அணியிலும் இடம்பிடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷி குறித்து கருத்து தெரிவித்த டேல் ஸ்டெய்ன், “சூர்யவன்ஷி மிகவும் வித்தியாசமான திறமையைக் கொண்ட வீரர். இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்துள்ள அரிய புதையல். சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்ற ஜாம்பவான்களின் வரிசையில் இவரும் இடம்பிடிக்கக் கூடியவர். எதிர்காலத்தில் மிகப்பெரிய சாதனைகள் படைப்பதற்கான அனைத்து திறமைகளும் அவரிடம் உள்ளன. ஆனால் அவரை சரியான முறையில் வழிநடத்தி, போட்டிகளில் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதே முக்கியமானது” என தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் தனது திறமையை நிரூபித்துள்ள வைபவ் சூர்யவன்ஷி, அடுத்ததாக அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான இருபது ஓவர் தொடர்களில் எவ்வாறு செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.




