வவுனியாவில் மாணவர்களுக்கு தலைக்கவசம் கட்டாயம் – பெற்றோருக்கு ஒரு வார அவகாசம்

வவுனியாவில் மோட்டார் சைக்கிள்களில் பாடசாலை மாணவர்களை அழைத்துச் செல்லும் பெற்றோர், தங்களது பிள்ளைகளுக்கு கட்டாயமாக தலைக்கவசம் அணிவிக்க வேண்டும் என வவுனியா பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நடைமுறையை முழுமையாக அமல்படுத்துவதற்காக பெற்றோருக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனை முன்னிட்டு, வவுனியா பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி மலீத் ரணதுங்க தலைமையில், வவுனியா – கண்டி வீதியில் அமைந்துள்ள வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் முன்பாக இன்று விசேட விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிள்களில் தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்து வந்த பெற்றோர்கள் நிறுத்தப்பட்டு, சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பொலிஸார் விளக்கமளித்தனர்.
அத்துடன், மாணவர்களுக்கான தலைக்கவசப் பயன்பாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் விநியோகிக்கப்பட்டன.
ஒரு வார கால அவகாசம் நிறைவடைந்த பின்னர், விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.




