
ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் நேற்று (11) நடைபெற்ற ‘ஹட்டன் லீக் மேயர் கிண்ண’ கால்பந்து தொடரின் இரண்டாம் சுற்றுப் போட்டியின் போது திடீரென மோதல் ஏற்பட்டதால் பதற்றமான சூழ்நிலை உருவானது.
யங் மேட்ஸ் எஃப்சி மற்றும் நோர்வூட் சன்ரைஸ் எஃப்சி அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி நிறைவடைய ஏழு நிமிடங்கள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் மோதல் ஆரம்பமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்த நேரத்தில் யங் மேட்ஸ் எஃப்சி அணி 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
மோதல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து சில பார்வையாளர்கள் மைதானத்திற்குள் நுழைந்ததால், பதற்றம் கைகலப்பாக மாறியதாகக் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஹட்டன் பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களால் போட்டியின் எஞ்சிய ஏழு நிமிடங்களை வேறொரு மைதானத்தில் நடத்த அனுமதி வழங்குமாறு நோர்வூட் சன்ரைஸ் எஃப்சி அணி போட்டி ஏற்பாட்டாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போட்டியின் எஞ்சிய நேரத்தை எப்போது, எங்கு நடத்துவது என்பது குறித்து போட்டி ஏற்பாட்டாளர்கள் விரைவில் இறுதி முடிவை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.




