இலங்கைசெய்திகள்

நீராடச் சென்ற 13 வயது பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு – புத்தளத்தில் சோகம்

Desktop Image Mobile Image

புத்தளம் மாவட்டத்தின் ஆராச்சிகட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கல்ஓயா சாலையின் மணல் முனைப் பகுதியில் நீராடச் சென்ற 13 வயது பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஆராச்சிகட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மாணவன் ஆராச்சிகட்டுவ வைரன்கட்டுவ பகுதியைச் சேர்ந்த சிலாபம் மஹா வித்தியாலயத்தின் 9ஆம் வகுப்பு மாணவரான எஸ்.ஜே.எம். லகிந்து சாமிக என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குடும்பத்தில் மூத்த சகோதர்கள் இருவரைக் கொண்ட இளைய மகனான லகிந்து, கடந்த 19ஆம் திகதி மாலை பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்த பின்னர், நண்பருடன் வெளியே செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அப்போது அவரது பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, “செருப்பு வாங்கச் செல்கிறோம்” எனக் கூறி நண்பருடன் வெளியேறிய மாணவன் பின்னர் செங்கல்ஓயா மணல் முனைப் பகுதிக்குச் சென்று நீராடியுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கியதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அவருடன் சென்ற நண்பர் பாதுகாப்பாக கரையை அடைந்து உதவி கோரி அலறியதையடுத்து, அப்பகுதி மக்கள் மற்றும் அயலவர்கள் இணைந்து தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

 

பின்னர் நீரில் மூழ்கிய நிலையில் மாணவன் மீட்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிகட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button