
மலையகப் பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை, பலத்த காற்று மற்றும் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல பகுதிகளில் மண்சரிவு அபாயமும் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியின் தலவாக்கலை சென் கிளயர் நீர்வீழ்ச்சி பகுதியில், இன்று (02) காலை பலத்த காற்றின் தாக்கத்தால் மரம் ஒன்று முறிந்து வீதியின் குறுக்கே விழுந்துள்ளது.
இதனால் அந்த வீதியில் போக்குவரத்து ஒருவழிப் பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், சாரதிகள் மாற்று ஏற்பாடுகளுடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முறிந்து விழுந்த மரத்தை அகற்றும் பணிகள் பிரதேச மக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் – நுவரெலியா மற்றும் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதிகளின் பல பகுதிகளில் மண்சரிவு அபாயம் காணப்படுவதால், அத்தியாவசிய தேவையின்றி பயணங்களைத் தவிர்க்குமாறும், பயணம் செய்ய வேண்டியவர்கள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.




