வெடுக்குநாறிமலையில் சைவ வழிபாட்டுக்கு அனுமதி

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் எதிர்வரும் 12ஆம் திகதி பௌத்த மற்றும் சைவ மத வழிபாடுகள் நடைபெறவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு ஏற்பட்டுள்ள சூழ்நிலைகள் தொடர்பாக நெடுங்கேணி பொலிஸார் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.
இருதரப்பினரும் ஒரே நேரத்தில் குறித்த பகுதிக்கு வருவதால் அமைதிக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என பொலிஸார் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இதனையடுத்து, ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பௌத்த தேரர் தரப்பினர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி தங்களது தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.
வழக்கு விசாரணையின் போது, தொல்பொருள் பகுதிகளுக்கு சேதம் ஏற்படுத்தக்கூடாது என்றும், புதிய நிரந்தர கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சைவ மக்களின் வழிபாடுகளைத் தடுக்க வேண்டும் என பொலிஸார் மற்றும் தேரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், ஆலய நிர்வாகம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
வெடுக்குநாறிமலையில் வழிபடும் உரிமைக்கு தடையிட முடியாது என உயர் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கியுள்ள உத்தரவும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதனை பரிசீலித்த நீதிமன்றம், எதிர்வரும் 12ஆம் திகதி சைவ மக்களும் வழமையான பூஜை மற்றும் சமய வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.
இந்த வழக்கில் ஆலய நிர்வாகம் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி தி. திருஅருள் முன்னிலையாகி வாதங்களை முன்வைத்திருந்தார்.




