கோவை சிறுமி கொலை வழக்கில் புதிய திருப்பம்; தாய் வெளியிட்ட தகவல் அதிர்ச்சி

இந்தியா – தமிழ்நாட்டின் கோவை மாவட்டம் சூளூர் பகுதியில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காணாமல் போன சிறுமி பின்னர் குளம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த இருவரே இந்தக் கொடூரச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, சிறுமியின் தாய் வெளியிட்டுள்ள கருத்துகள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பிரேத பரிசோதனைக்குப் பின்னர் தனது மகளின் உடலை தமக்கு காண்பிக்கவில்லை என்றும், தனக்குத் தெரியாமல் சிறுமியின் தந்தை உடலை சொந்த ஊரான சேலம் மாவட்டத்திற்கு கொண்டு சென்று தகனம் செய்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
“நான் செல்வதற்குள் உடலை எரியூட்டி விட்டனர். எங்களுக்கு நீதி வேண்டும்” என அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
மேலும், மகளின் உடலை பெற்றுக்கொள்வதற்காக மருத்துவமனையில் எந்தவித ஆவணங்களிலும் தாம் கையெழுத்திடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தமிழக காவல்துறையினர் தீவிர விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.




